 |
முற்றுப்பெற்ற போருக்குப் பின் அவசரகாலச் சட்டம் எதற்கு?
யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறும் போது யுத்த கால எடுப்புகளுக்கும் முடிபு கட்டுவதே நயத் தக்க நாகரிகம். யுத்தம் முடிந்து விட்டதெனக் கூறிக்கொண்டு யுத்த கால நடவடிக்கைகளை ஓரங்கட்டாமல் அப்படியே வைத்திருந்தால், அது சமாதான சூழ் நிலைக்கு வழிகோல மாட்டா.
அவ்வகையில் நாட்டின் வடக்குக் கிழக்கில் இருக்கக்கூடிய உயர் பாதுகாப்பு வலயம் முதல் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி இருக்கக் கூடிய இராணுவக் காவலரண்களும் படை முகாம்கள் வரையான அத்தனையும் யுத்த சூழமைவை நினைவுபடுத்துபவையாகும். இதற்கு மேலாக நாட்டில் இன யுத்தம் உருவானது முதல் நடைமுறையில் இருக்கக் கூடிய அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட் டம் என்பன அகற்றப்படாத நிலையில் சமாதான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அறவேயில்லை எனலாம்.
யுத்தத்திற்குப் பின்பான இலங்கை நாடாளு மன்றம் அவசரகாலச் சட்டத்தை நீக்கும் என நம்பியிருந்த போதிலும், அந்த நம்பிக்கைக்கு மாறாக அவசர காலச் சட்டம் மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்து விட்டது எனக் கூறுவதற்கும் அவசரகாலச் சட் டத்தை நீடிப்பதற்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உண்டா?
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்து விட்டதெனில், அதற்காகக் கொண்டுவரப்பட்ட அவசர காலச்சட்டத்தை நீடிப்பதென்பது பொருத் தமற்றதாகும். ஆக, இலங்கை அரசைப் பொறுத்தவரை பயங்கரவாதம் என்ற சொல் ஒரு இனம் சார்ந்த சொல்லாகவே கருதப்படுகின்றது. அதாவது தமிழினம் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டது. எனவே அவசரகாலச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதன் மூலமே தமிழ்த் தரப்பை சாதாரண சட்ட எல்லைகளுக்கு அப்பால் தண்டிக்க முடியும் எனக் கருதப்படுகின்றது.
இல்லையேல் நேற்று கூடிய நாடாளுமன்றம் அவசரகாலச்சட்டத்தை முழுமையாக நீக்கி தமிழ் மக்களுக்கு சமாதானத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. வழமை போல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட் டுள்ளது. இதில் இருந்து புரிவது அவசர காலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றில் அரசு வைத்திருக்கும் நம்பிக்கையாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இலங்கை அரசுக்கு இன்னமும் ஏற்படவில்லை என்பதையே சுட்டி நிற்பதாகும்.
எதுவாயினும் இலங்கை அரசின் ‘போர் முற்றுப் பெற்றது’ என்ற அறிவிப்பின் உண்மைத் தன்மையானது, தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதில் தங்கியுள்ளதேயன்றி அவசர காலச்சட்டத்தை நிறைவேற்றுவதிலோ அல்லது மீண்டும் ஒரு போரை இலங்கைப் படையினர் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர் என்ற நம்பிக்கையிலோ தங்கியிருக்க வில்லை. இதுவே நிஜம்.
|
|
 |