 |
சனல்-4 சிவனின் நெற்றிக்கண் இதோ!
சிவனுக்கு முக்கண்ணன் என்று பெயர். நெற்றியில் கண் இருப்பதனால் அந்தப் பெயர் ஏற்படலாயிற்று. நெற்றிக்கண் திறந்தால் தீப்பிழம்பு பாயும். நக்கீரனைச் சுட்டெரித்தது நெற்றிக் கண்ணே.
தமிழ்க் கடவுள் முருகனைத் தந்ததும் நெற்றிக் கண்ணே. இந்தப் புராணங்களெல்லாம் இப்போது எதற்கு என்றா கேட்கிறீர்கள்? எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு.
ஆம், சனல்-4 இவ்வளவு படங்களை-ஆதாரங்களை காட்சிப்படுத்துகின்றதே. இவை எல்லாம் அந்தச் சனலுக்கு எப்படிக் கிடைத்தது? இந்தக் கேள்விகள் தேவையற்றவை. ஏனெனில் ஊடகங்களையும் மூன்றாவது கண் என்று கூறுவதுண்டு. அதாவது சிவனின் கண்ணென்று பொருள் கொள்ளலாம். வன்னியில் நடந்த யுத்தத்தை இறைபரம் பொருள் வெளிப்படுத்த முற்பட்டுவிட்டது.
என்ன செய்வது நேரில் வந்து அதனை செய்ய முடியாத துரதிர்ஷ்டம். சிவன் உடுத்திருக்கும் புலித்தோல், தொண்டையில் வைத்திருக்கும் சயனட் நஞ்சு, சடாமுடியின் மறைப்பில் கங்கைப் பெண் இவற்றுக்கெல்லாம் இலங்கை மண்ணில் இருக்கக் கூடிய அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் இடம்தரா மாட்டா.
இதற்கு மேலாக அவரும் பொலநறுவையில் உள்ள அவரின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டவர்தான். சுருங்கச் சொன்னால் இடம்பெயர்ந்து அலையும் தமிழர்களின் நிலைதான் சிவனுக்கும். அதனால் அவர் நேரில் வந்து வன்னி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதை படம்பிடித்து காட்டுவது கடினம். இதற்காக அவர் ஒரு திட்டம் தீட்டினார். திட்டத்தை இலண்டனில் இருந்து அமுல்படுத்த எண்ணினார்.
இந்தியாவில் அமுல்படுத்தினால் நல்லது தான். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை விட ஒருபடி மேலே சென்று முடியும் அந்த முடியை மறைக்க தலைப்பாகையும் அணிந்திருப்பதால் அவரை துண்டற நம்ப முடியாது என்று முடிபெடுத்தார். உருத்திராட்சம் அணிந்த இந்திராகாந்தி மீது நம்பிக்கை தான். அதற்கென்ன செய்வது அவரை சிங்கின் உறவுகள் சுட்டுத்தள்ளி விட்டனவே. இப்போது சோனியா. அவரை எப்படி நம்புவது. இத்தாலி மக்கள் அவரை நம்பாமல் தானே இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆகவே, இலண்டனை தெரிந்தெடுத்தார்.
சிவன் என்ற பெயரை ‘சனல்’ என்று மாற்றிக் கொண்டார். தனது ஓருருவத்தில் இருக்கக் கூடிய சிவன், உமை, கங்கை, முயலகன் என்ற நால்வரையும் நான்கு என்று ஆக்கிக் கொண்டு எடுத்த காட்சிகளைக் காண்பிக்கின்றார். அட! இதை நாங்கள் செய்யவில்லை. இது பொய். முற்றிலும் பொய் என்று இலங்கைச் சனநாயகம் சொல்கிறது.
சிவன் சிரிக்கிறார். அட சிவனோடு இருந்த நால்வரும் (சனல்-4) சிரிக்கின்றனர். இதற்கு ஆதாரம் உண்டு. இன்னும் படங்களும் உண்டு. நெற்றிக்கண்ணைத் திறக்கட்டுமா? என்று கேட்க, ஐ.நா.செயலர் விசாரணை தொடங்கும் என்று கூறிக்கொண்டே நடுங்குகின்றார்.
இறைவா! எல்லாவற்றையும் ஒருவன் பார்த்துக் கொண்டிருப்பான் என்பார்களே! அது தவறு. எல்லாவற்றையும் நான்கு பேர் பார்த்துக் கொண்டிருப்பர்கள். நாங்கள் சனல்-4ஐப் பார்ப்போம். உலகம் எங்கள் பரிதாபத்தைப் பார்க்கட்டும். விரும்பினால் ஜெனரல் சரத் பொன்சேகா மந்திர உச்சாடனம் செய்யட்டும். எங்கே உருத்திரதாண்டவம்! இதோ இன்னும் சில நேரங்களில் ஆரம்பமாகும்.
Source: Valampuri
|
|
 |