இலங்கை தூதரகத்தை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்: நெடுமாறன், வைகோ கைது
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவுக்கு அனுமதிக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்வதை கண்டித்தும், சென்னையில் இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழக பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், ராஜபக்ஷவின் கொடும்பாவி உருவ பொம்மையை எரித்தனர்.
பின்னர், அனைவரும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர். பொலிஸார் தடுத்தும் யாரும் நிற்கவில்லை.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
Source: tamilwin